Thursday, October 30, 2008

கும்மியடிப்போம் வாரியளா?



கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்துஅல்லது நடனம்.
இது தொன்று தொட்டு வரும் ஒரு கிராமியக்கலை.
'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாகஆடிக்கொண்டோ,
அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ
வரும்போது இசைக்குத் தக்கவாறு தன்
கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும்,
தலையையும் அழகுற அசைத்து,
குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.

நம் பதிவர்கள் மத்தியில் உள்ள கும்மிக்கு இது போல சரியான
அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்!

Wednesday, October 29, 2008

விட்டுப்போனவளின் விடாத நினைவு!




சாலையோர மரத்தின்
உதிர்ந்திருக்கும் மலர்களில்
உனக்கான ஒன்றும் இருக்கலாம்.



ஓரம் தைத்த கைகுட்டையின்
ஒற்றை இன்சியலாய் இருக்கிறது
என் பெயர் மட்டும்.



உன்னையும் என்னையும்
நனைத்த மழைத்துளிகளை
எங்கு சென்று தேடுவது?



நீ மிதித்து போன சருகுகள்
பத்திரமாய் இருக்கின்றன
அலமாரி புத்தகங்களில்.



விட்டுப்போன உன்னை நினைத்து
புலம்புகின்றன என் கவிதைகள்.



உனக்கான கடிதங்களில்
கேள்விக்குறிகளால் நிரப்பி
எனக்கே அஞ்சல்
செய்து கொள்கிறேன்.



இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !

Tuesday, October 28, 2008

தொட்டிலை ஆட்டும் கை


ஆண்களுக்கு இணையாக தங்களாலும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும் என மதுரை "வளைகரங்கள்' நிரூபித்து வருகின்றன. அதற்காக நேர்மையான எந்த வேலையையும் செய்ய தயார் என தடாலடியாக களம் இறங்கியுள்ள இவர்கள் "லோடுமேன்'களாக லாரிகளில் சென்று கலக்கி வருகின்றனர்.

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என கேட்ட காலம் மலையேறி விட்டது. எத்துறையை எடுத்து கொண்டாலும் பெண்களின் பங்களிப்பு இன்று இன்றியமையாதது. "சுய உதவிக்குழுக்கள்' என்ற புதிய "யுக்தி' வெளியுலகிற்கு அவர்களை அடையாளம் காட்டியுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்காக இங்கு சத்துமாவு உருண்டைகளை பெண்கள் தயாரிக்கின்றனர்.மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள "பால்வாடி' மையங்களுக்கு எடுத்து சென்று சீருடை அணிந்த பெண் லோடுமேன்கள்விநியோகிக்கின்றனர். இவர்களும் சங்க உறுப்பினர்கள் தான்.கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது.சத்துமாவு உருண்டை தயாரிக்க தேவையான கோதுமை, வெல்லம்ஆகியவற்றை இவர்களே லாரியில் ஏற்றி, இறக்கி வருகின்றனர். மூட்டைகளை லாரியில் ஏற்றி, இறக்க முன்பு ஆண் லோடுமேன்களுக்கு அதிகபட்ச கூலியை கொடுத்து வந்தனர். இதனால் இவர்களது லாபத்தில் மாதம் தோறும் பெரும் தொகை "துண்டு' விழுந்தது. இக்கடினமான பணியை இவர்கள் தற்போது கற்று கொண்டுவிட்டதால் அந்த பணமும் இவர்களுக்கு கிடைக்கிறது.

செய்தியும் படமும்: தினமலர்.
தொட்டிலை ஆட்டும் கைதொல்லுலகை ஆளும் கைஎன்று பாடிய கவியின் வாக்குபொய்க்கவில்லை....
ஹி ஹி : இது நம்ம 25வது பதிவு. நம்ம எழுத்து
பலபேருக்கு பாதிப்ப ஏற்படுத்தினாலும் எழுதுறத
விடமாட்டோம்ல. பதிவெழுத உதவி வரும் அருமை
அண்ணன் ஆயிலுக்கும் அன்பு அண்ணன் தமிழ்ப்ரியனுக்கும்
வணக்கத்துடன் நன்றிகள்!

Thursday, October 23, 2008

ஒர் தாய் மக்கள் நாம்!



வா நண்பா
உன்னோடு பேச வேண்டியிருக்கிறது!
இந்திய தாயின் மடியில் வாழும்
ஒர் தாய் மக்கள் நாம்!
நமக்குள் ஏனடா மதச்சண்டை
ஜாதீக்கலவரம்?

குண்டு வைக்க குரான் சொல்லியதா?

பயங்கரவாதத்தை பைபிளில் படித்தோமா?

பட்டாகத்தி கொண்டு கொல்ல
பகவத்கீதை பகர்கிறதா?

இன்று நீ உண்ட உணவு
நீ சண்டையிட்ட சகோதரன்
பயிரிட்டிருக்கலாம்!

நீ உடுத்தியிருக்கும் உடுப்பு
உன்னால் பாதிக்கப்பட்டவன்
நெய்திருக்கலாம்!

நீ விடும் சுவாசக்காற்று
இங்குதான் தோழா
சுழன்று கொண்டிருக்கிறது!

சாதீமத வெறி என்னும் மரம்
வெட்ட வெட்ட
துளிர்த்துக்கொண்டுதானிருக்கும்

வேரில் வென்னீர் ஊற்றுவோம்
புறப்படு நண்பா புயலென!

.

Tuesday, October 21, 2008

திருக்குறள் கதை.



12ம் வகுப்பு, அ- பிரிவு. காலை நேர முதல் வகுப்பு.
தமிழ் ஐயா உள்ளே நுழைந்ததும் அமைதியாகிறது.
அனைவரும் வணக்கம் சொல்லி அமர்ந்ததும் ஐயா
பேச தொடங்குகிறார்.
கண்னுகளா, இதோ பொது தேர்வு உங்களை நெருங்கி
விட்டது. நீங்கள் எல்லாரும் மிகவும் சிரமப்பட்டு கண்
விழித்து தயார் செய்து கொண்டிருப்பீர்கள். ஆகவே
நான் இந்த வகுப்பில் உங்களுக்கு பாடம் எதுவும்
எடுக்கப்போவதில்லை. நாமனைவரும் ஒரு அரை மணி
நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டிருப்போம். இது உங்களை
சற்றே புத்துணர்ச்சி அடையவைக்கும். நாமனைவரும்
பிரிந்து சென்றாலும் நீங்கள் எல்லாம் ஒரு நல்ல நிலையை
அடைவீர்கள் என்று நம்புகிறேன்.
அப்போது ஒரு பணக்கார மாணவன்,
ஐயா, நாமெல்லாம் பிரிந்து செல்ல போகிறாம்,எனது அப்பா
நமக்கெல்லாம் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஒரு சில அரசியல்வாதிகளும், ஊர்தலைவர்களும் நமது
தலைமையாசிரியரும் அவ்விருந்தில் கல்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
இப்பொழுதே 4 ஆடு வாங்கி கட்டி வைத்துவிட்டோம். நீங்களும் வர
வேண்டும் ஐயா.
தமிழ் ஐயா;
தம்பி, நான் மாமிசம் சாப்பிடுவதில்லை,
"கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
"
என்ற அய்யனின் வாக்கை கடைபிடித்து வருகிறேன். பிற
உயிர்களை கொல்வது பாவமல்லவா? பிற உயிர்களை
கொல்பவன் என்றுமே நிம்மதியாக இருக்க முடியாது.
அந்த மாணவன்;
முனுமுனுப்பாக, போடா இவரும் இவரோட வள்ளுவரும்.
வகுப்பு கலைகிறது. ஒரு மாணவனின் கண்ணில் நீருடன்
அமர்ந்திருக்க அதை கண்ட ஐயா பதற்றத்துடன், ஏம்ப்பா,
என்னாச்சு, ஏன் கலக்கத்துடன் இருக்க?
அந்த மாணவன்:
ஐயா, பிற உயிர்களை கொல்பவன் நிம்மதியாவே இருக்க
முடியாதுன்னு நீங்க சொன்னிங்க, ஆனா எங்கப்பா ஒரு
கறி கடை வைத்திருக்கார், அவரு தினமும் பல ஆடுகளை
கொன்று விற்று வரும் காசில்தான் எங்க குடும்பமே நடக்குது,
அப்ப நாங்க நிம்மதியா இருக்க முடியாதா?
ஐயா சிரித்து கொண்டே, அட இதுதான் உன் கவலையா?
சரி விடு, நான் உங்க அப்பாவை பார்த்து பேசுகிறேன்.
நீ ஓன்றும் கவலைப்படாதே!
சிறிது நாட்களுக்கு பிறகு....
அந்த கறிக்கடை இடிக்கப்படுகிறது.
அதே இடத்தில் ஒரு பலசரக்கு மளிகை கடை
திறக்கப்படுகிறது. அதோ அந்த மாணவனின்
அப்பா கல்லாவில் அமர்ந்திருக்கிறார். அவர் தலைக்கு
மேலே.,
"கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்ற குறள் எழுதிய பலகை பொருத்தப்பட்டிருக்கிறது.


ஹி ஹி : திருக்குறளை வைத்து கதை எழுத ஆசைப்பட்டாச்சு,
சரியா வரலைன்னாலும் எழுதியாச்சு, எப்படி இருக்கோ?


திட்டாதிங்கோ, அடுத்த முறை இன்னும் நல்லா எழுதலாம்!

Monday, October 20, 2008

குழந்தையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம் தானே!


எனது கணிப்பொறியின் முகப்பை எப்போதும்
குழந்தைகளின் புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.


குழந்தையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம் தானே!
மிகுந்த பணி சுமைகளுக்கிடையில் மண்டை காயும் போது
எல்லா கோப்புகளையும் ஒரு நிமிடம் மினிமைஸ் பண்ணி
அந்த இளம் சிரிப்பை பார்த்தால் போதும் எல்லாவித
இறுக்கங்களும் சூரியனை கண்ட பனி போல விலகும்!


கலைவானர் என்.எஸ்.கே பாடியது போல பலவித
சிரிப்புகளுக்கிடையில் கவலைகளைப் போக்கும்
அரும்மருந்தாக இக்கள்ளமில்லா இளம் சிரிப்பை
காண்பது மனதிற்கு இனிமை சேர்க்கும் என்பது
என்னுடைய அசைக்கமுடியா நம்பிக்கை.


வசிய சிரிப்பு, ஆணவ சிரிப்பு, அகங்கார சிரிப்பு,
விஷம சிரிப்பு, வில்லங்க சிரிப்பு, விகார சிரிப்பு,
வில்ல சிரிப்பு, பொய் சிரிப்பு, போக்கிரி சிரிப்பு,
இது போன்ற பல கொடிய சிரிப்புகளுக்கிடையே
குழந்தைகளின் பொன் சிரிப்பு போற்றத்தக்க
ஒன்று என் கருத்தை மறுக்கத்தான் முடியுமா?


அப்புறம் நம்ம முகப்பு பேச்சிலர் அறை போல்லெல்லாம்
இருக்காது. நன்கு துடைத்து வைத்த குடும்ப பெண்ணின்
வீடுபோல சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவேன்.


இப்பதிவிட அழைத்த அருமை அண்ணன் உயர்திரு.தமிழ்
அவர்களுக்கு,
அருமை அண்ணன் மயிலை சிங்கம் ஆயிலுக்கும்
நன்றி.


ஹிஹி: எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க!
டெஸ்க்டாப்ப வைச்சி ஒரு பதிவு;
அதுக்கு தொடர் விளையாட்டு வேற!
நல்லாதாம்பா இருக்கு!!! :)

Thursday, October 16, 2008

மாப்பு தமிழண்ணன் வச்சிட்டாரு ஆப்பு!



என்னமோ கேள்வி பதிலாம். படிச்சிபாருங்க!ப்ளாக் உலகின் தலையெழுத்து என்னோட பதிலையும்படிங்க...

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று தெரியவில்லை. ஆனால் சிறு வயது முதலேசூப்பர்ஸ்டார் மேல் ஒரு நீங்கா பற்று உண்டு.உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று வசனமெல்லாம் சொல்லிபரிசா அப்பா முதுகுல நாலு சாத்து கொடுத்தாரு, நினைவு தெரிந்து பார்த்தபடம் தலைவரின் “தளபதி”. ஸ்கூல் போகமல் அடம் பிடித்து பின் அப்பாவின்சைக்கிளில் பர்ஸ்ட் ஷோ போனோம். தேங்காய் பண் சாப்பிட்டு கொண்டேதளபதி பார்த்தது ஒரு இனிய நினைவு.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அபுதாபியில் மிகுந்த பணிசுமைக்கிடையில் நண்பர்களின்வற்புறுத்துதலின் பேரில் தசாவதாரம் இரவு 1மணி காட்சிசென்று வந்தோம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்பிரமணியபுரம். திருட்டுத்தனமாக அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்துபார்த்தோம். நல்ல படங்களை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு விசிடி மற்றும்இனையத்தின் மூலமும் பார்க்கிறோமே என்ற சின்ன குற்றயுனர்ச்சியுடன் பார்த்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்.ஒரு 20-25 முறை பார்த்திருக்கிறேன். ஒரு வேலை அந்த சமயத்தில் காதல் நம்பள ஆட்கொண்டு பாடாய் படுத்தியதால் இருக்கலாம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நமக்கு சினிமா - அரசியல் இரண்டிலுமே ஆழ்ந்த பற்று கிடையாது.ஆகையால் தாக்குமளவிற்கு ஒன்னுமில்ல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
S.B.B. மூச்சு விடாம பாடிய சிகரம் படத்தின் மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ? என்ற பாடல். உண்மையில் தொழில்னுட்பஉதவியுடன் தான் அந்த பாடல் பாடப்பட்டுள்ளது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்டதைப்படிக்கும் பழக்கமுள்ளதால் சினிமாவும் அடக்கம்.

7. தமிழ்ச்சினிமா இசை?
இளையராஜாவை ரசித்து, உருகி ஒடிய காலம் ஒன்று உண்டு.மெல்லிசை பாடல்கள் அதிக விருப்பம். சரோஜா சாமான் நிக்காலோ போன்ற துள்ளிசை பாடல்கள் என்றால் சற்றே அதிக தூரம்.மெல்லிய மனசு என்ன பண்னுறது?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சினிமா உலகுடன் நேரடி தொடர்பு இல்லாமல் இருப்பதே எனக்கும் நல்லது;சினிமாவுக்கும் நல்லது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னும் மேம்பட வேண்டும் என நினைக்கிறேன். சினிமாவை நம்பிஎத்தனையோ ஜீவன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்தை கனவுகளை மனசிலும் பசியை வயிற்றிலும் சுமந்துஅலையும் பலரின் வாழ்க்கை ஒளி பெற வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இது ஒரு சிக்கலான கேள்வியோ?சினிமாவையே பேச்சாகவும் மூச்சாகவும் நினைக்கும் வாழ்க்கைஇருண்டு விடும். பத்திரிக்கை தொலைக்காட்சி பல நொடித்து போகும்.நம்ம தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள். அப்படியெல்லாம் விட மாட்டார்கள்.


சினிமா டிஸ்கி நினைவுகள்:
1. காதலிக்கும்போது யாருக்கும் தெரியாமல் தங்கமணியோடு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே கல்யானமாகிவிட்டது.

2. கல்யானமாகிப்பார்த்த முதல் படம்; சூர்யா-திரிஷா நடித்த மெளனம் பேசியதே!

3. கல்லூரி ஸ்ட்ரைக் அன்று லாரியில் கூட்டமாக ஏறி பியர்லெஸ் தியேட்டரில் படம் பார்த்த மறக்க முடியா நாட்கள்

4. சில தமிழக முதல்வர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா எங்கள் தங்கத்தலைவரயும் முதல்வராக்கும் என்கிற அசைக்க முடியா நம்பிக்கை.

5. என்னையும் சினிமா பற்றி எழுத அழைத்த அருமை அண்ணன் தமிழ்ப்ரியன் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.

6. சினிமாவ பத்தி பேசனும்ன்னு வந்தாச்சு, எங்க தலைவர் இல்லாமலா? அதான் நம்ம தலயோட போட்டோ.

Tuesday, October 14, 2008

ஒரு சிறுமியின் கடைசியாசை....

1999ம்மாண்டு கல்லூரி படிக்கும்போது சிறுவர் சிறுமிகளை
பள்ளிக்கு அழைத்து சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி ஒரு
சின்ன மொட்டு உயிரிழந்தது. அப்போது சிந்திய கண்னிர் துளிகளில்
ஒரு கவிதைத்துளி...


ஒர் அம்மாவின் கண்ணீர்


சாவி கொடுக்க நீயின்றி தவிக்கிறது
கரடி பொம்மை;

நீ சுவற்றில் எழுதிய கிறுக்கல்கள் நிற்கின்றன
முற்றுபெறாமலேயே;

நீ செல்லங்கொண்டாடிய பொம்மைகளைப் போல
நானிருக்கிறேன் நீயின்றி;

நீ துளிர் கிள்ளிய ரோஜாச்செடி உனக்கான
ஒரு பூவை பூத்து சூடிக்கொள்ள நீயின்றி
உதிர்ந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு இதழாக..

நீ ஓட்டிய மூன்று சக்கர சைக்கிள்
மூலையில் காத்திருக்கிறது உன் வரவை நோக்கி...

உயிரற்ற இவைகளின் வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கிறேன்
நடைபிணமாய் நானும்...

ஆனாலும் கண்ணே இன்னும் காதுகளில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.,
நீ கடைசியாய் சொன்ன வார்த்தைகள்;
”அம்மா, ப்ளிஸ்ம்மா, இன்னைக்கு மட்டும்
ஸ்கூல் போகலம்மா”




வருத்தம் – 1 : இன்னும் கிராமப்புறங்களில் 10 பேர் அமரக்கூடிய வாகனத்தில்

50 சிறார்களை அழைத்து செல்கிறார்கள்.

வருத்தம் – 2 : தன் பிள்ளைகள் ஆங்கில வழி படிக்க வேண்டும் என்று

ஆசைப்படும் பெற்றோரே இதைப்பற்றி கவலைப்படாமல்

அனுப்புவது.

Friday, October 10, 2008

ஏன்?...எதற்கு?...எப்படி?யார்?...


வலையுலக சிங்கங்களே, பதிவெழுதும் பண்பாளர்களே...
மயிலைப்பார்த்து வான்கோழி சிறகு விரித்த கதையாக
நானும் ப்பிளாக் தொடங்கி எழுத வந்துவிட்டேன். ஆனால் பாருங்கள்
இன்னும் சரியாக விடை தெரியாத கேள்விகள் சில உள்ளன.
பதில் தெரிந்தால் கூறுங்களேன்...

1. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி, படிக்கிற மாதிரி பதிவெழுதுவது எப்படி?
(இதற்கு ஆயில் பதில் சொல்லனும்)

2. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடும் பதிவருக்கு வேறு வேலை ஒன்னும் இருக்காதா?
(இதுக்கு ப்திவு வள்ளல் லக்கி பதில் சொல்லனும்)

3. ஒரு பதிவ போட்டுட்டு கமெண்ட் வந்திருக்கா, வந்திருக்கான்னு பார்க்க மனசு அடிச்சிக்குதே ஏன்?
(கமெண்ட் போடாதவங்க பதில் சொல்லனும்)

4.தமிழ் மணம் சூடான இடுகையில் வரனும்னா எழுத வேண்டியது எப்படி?

5. நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?

6. கும்மி, மொக்கை -சரியான விளக்கம் என்ன?
(நிஜமா நல்லவருக்கு தெரிந்திருக்கும்)

7.பதிவர் சந்திப்பை பற்றி பதிவெழுதும் பதிவர்கள் மறக்காம்ல் என்ன சாப்பிட்டார்கள்
என்பதையும் எழுதுகிறார்களே அது ஏன்?
(அண்ணன் தமிழ்ப்ரியன் பதில் வைத்திருக்கலாம்)

8. ப்பிளாக், பதிவு, கமெண்ட் இப்படியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தால்
ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
( அண்ணன் அபிஅப்பா பதில் சொல்லுங்ளேன்)

9. அலுவலக நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பிளாக் படிக்க வழி என்ன?
(வேலைக்கு டிமிக்கி அடித்து பிளாக் படிக்கும் நல்லவர்களே சொல்லுங்க)

10. இதில் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்த பதிவருக்கு என்ன பட்டமளிக்கலாம்?

11. இந்த மொக்க பதிவ படிப்பவர்களுக்கு கோபம் வருமா?

12. அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?

ஹி ஹி : சில பதிவர்கள் பதிவுக்கு கீழே ”டிஸ்கி” எழுதுவாங்க., அந்த டிஸ்கி எல்லாம் சேர்த்து ஒரு பதிவா போட்டுட்டோம்ல... இப்ப சொல்லுங்க ஒரு பதிவருக்கு உள்ள தகுதி எனக்கும் வந்துட்டுல்ல...

Tuesday, October 7, 2008

நண்பர்கள் நொம்ப நல்லவங்க..




நான்: மாப்ள எப்டி இருக்கடா?
மாப்ள: இந்த கேள்வியயே இன்னும் எத்தன வருஷத்துக்குடா கேப்பீங்க?
நான்: அட, என்ன மாப்ள; ஒரு முக்கியமான விஷயம் உன்னோட பேசனும்.
மாப்ள: யாரெல்லாம் முக்கிய விஷயம் பேசனும்ன்னு இல்லையா? என்னோட கஷ்ட்ட
காலம் போல, சரி மாட்டேன்னு சொன்னா நீ விடவா போற? தொடங்கு... :(
நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)
மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல.
நான்: அப்படி எல்லாம் சொல்லாதடா, நீ பாரு நான் என்னோட எழுத்து திறமய எப்படி
வெளியாக்கறேன்னு...
மாப்ள: நீ எழுதுவடா, ஆனா யாரு அதெல்லாம் படிப்பா?
நான்: அதுக்கும் ஒரு வழி இருக்குடா, தமிழ்மணம்ன்னு ஒரு உலகமே இருக்கு, அதுல நம்ம்
பதிவ போட்டா போதும்...
மாப்ள: ஓகோ, அது உன்னமாதிரி இருக்கவங்கல்லெல்லாம் வர்ர எடமோ?
நான்: இல்லடா, என்ன விட பெரிய புத்திசாலியெல்லாம் வருவாங்க.
மாப்ள: அப்ப நீ ஏண்டா அங்க போற? சரி போயிட்ட, பரவாயில்ல விடு. புலிய பார்த்து பூனை சூடு
போட்டுக்கிச்சு.
நான்: ஏய், உனக்கு என்ன தெரியும், என்னோட பதிவ படிச்சிட்டு கமெண்ட்டெல்லாம் போட்டுருக்காங்க.
மாப்ள: உன்னோட பதிவுக்கும் கமெண்ட்டா? உன்ன சொல்லி குத்தமில்ல அது கமெண்ட் போட்டவங்கலோடது. சரி, சரி யாரெல்லாம் கமெண்ட் போட்டுருக்கா?
நான்: ஆயில்யன்னு ஒரு சங்கத்து சிங்கம் இருக்காரு, தமிழ்பிரியன்னு ஒரு ஹிந்தி வாத்தியாரு
சுடுதேங்காயெல்லாம் போடுவாரு, நெஜமா நல்லவருன்னு ஒருத்தரு ரொம்ம நல்லா சமைப்பாரு,
அப்புறம் அபிஅப்பான்னு ஒரு தலைவரு சிரிக்க வைக்கிறதுல கிங்கு தெரியுமா? இன்னும் நெறைய
பேரு இருக்காங்க மாப்ள...
மாப்ள: ராசா, அவங்களயெல்லாம் விட்டுடு, நல்லா பதிவெழுதுறவங்களா இருப்பாங்க போல...
நான்: போடா, நானும் ஒரு பெரிய பதிவரா ஆவாம வுடமாட்டேன்...
சரி சரி, உன்னோட இவ்வளவு நேரம் பேசியிருக்கேன்; என்னோட பதிவ படிச்சிட்டு
ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போ...

ஹி ஹீ 1: மொக்க போடனும்ன்னு முடிவானதால் இந்த பதிவு...
ஹி ஹீ 2: கும்மி அடிப்போருக்கு- வருக வணக்கம்.
ஹி ஹீ 3: பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)

Thursday, October 2, 2008

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

இது இந்தியனாகப்பிறந்த நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய செய்தி. ஆம், உலகின் சிறந்த தேசிய கீதமாக நமது இந்திய தேசிய கீதத்தை யுனேசுக்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization).



இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

இனைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்....



Wednesday, October 1, 2008

கல்வெட்டு நினைவுகள்...


காலப்போக்கில் காணமல் போய்வரும் சாதனங்களில் ஒன்று சிலேட்டு . அனேமாக இந்த பதிவை படிக்கும் தோழர்கள் அனைவரும் சிலேட்டை பயன்படுத்தியிருப்போம்.

பள்ளிக்கூடம் செல்லும் முன்பே சிலேட்டு என்ற எழுது சாதனம் எனக்கு அறிமுகமாயிருந்தது. அந்த கல் சிலேட்டு அப்பா வாங்கிவந்த சில மணித்துளிகளிலேயே என்னால் உடைக்கப்பட்டாலும் என் நினைவுச்சிறைகளில் இன்னும் உடையாமல் பத்திரமாக இருந்துவருகிறது.

பல்ப்பம் என்றழைக்கப்படும் சிலேட்டு குச்சி கொண்டு எழுத கற்றுக்கொடுத்த முதல் ஆசான் என் அப்பா தான். நான் எத்தனை முறை உடைத்தாலும் புதுசு வாங்கி கொடுப்பாரே தவிர ஒரு முறைகூட அதட்டியதோ அடித்ததோ கிடையாது. அது என்னவோ தகர சிலேட்டை விட கல் சிலேட்டின் மீது அப்பாவிற்கு அதிக இஷ்டம், எனக்கு அதிகம் கிடைத்ததும் கல் சிலேட்டுதான்.

சிலேட்டு குச்சி பெரியதாக உடையாமல் வேண்டுமெனக்கு. தினமும் பள்ளி கிளம்பியதும் எதை மறந்தாலும் ஒரு குச்சி புதியதாக எடுக்க மறப்பதில்லை. சிலேட்டில் எச்சில் தொட்டு அழித்து ஓன்னாம் வகுப்பு வாத்தியாரிடம் அடி வாங்கிய பொழுதுகள் இன்னும் அழியாமல் மனதில் இருக்கின்றன.

சிலேட்டின் கருமை நிறத்தை கூட்ட கோவலை இலையும் கரியும் சேர்த்து தடவுவோம். சிலேட்டோடு சேர்ந்து சட்டையும் கருமையாகிப்போவும்.

எனது சிலேட்டுகள் எனக்கு எந்த அளவு உபயோகப்ப்ட்டதோ அதே அளவு என் அம்மாவுக்கு பால்
கணக்கு பார்க்கவும் சித்திக்கு கோலம் போட்டு பார்க்கவும் தம்பி தங்கைக்கு விளையாடவும் உதவியிருக்கிறது.

அகர முதல எழுத்துகலெல்லாம் கல் சிலேட்டிலிருந்தே அறிமுகமாயின எனக்கு. உடைந்து போன சிலேட்டுகள் எல்லாம் உடையாத கல்வெட்டு நினைவுகள் எனக்கு.


நீங்கள் இதை படித்துக்கொண்டிருங்கள், நான் சற்று பின்னோக்கி நினைவுகளை திருப்புகிறேன்,

அட,
அதோ வாயில் வைத்து மென்று முனை ஊறிய மாட்டிக்கிற பையில் கல் சிலேட்டு குச்சியோடு
நான் பள்ளி சென்றுகொண்டிருக்கிறேன்....



உங்களின் சிலேட்டு நினைவுகளையும் அ-னா எழுதிய நாட்களையும்
பின்னூட்ட சிலேட்டில் எழுதிச்செல்லுங்களேன்.....